பல வருடங்களுக்கு முன்பு எண்ணெய், ஒக்லஹாமா (Oklahoma) என்ற ஊரிலுள்ள ஒரு முதியவருக்குச் சொந்தமான நிலத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்த முதியவரோ வாழ்நாள் முழுவதும் ஏழ்மையின் பிடியில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்குச் சொந்தமான நிலத்தில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு பெரிய செல்வந்தரானார். முதலாவதாக அவர் காடிலாக் (Cadillac touring car) என்ற சொகுசு காரை வாங்கினார்.
பொதுவாக காடிலாக் காருக்கு இரண்டு மாற்று சக்கரங்கள் (Spare tires) காரின் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் அந்த முதியவரோ அந்தப் பகுதியில் உள்ள அனைவரும் வைத்திருப்பதை விட பெரிய காரை வாங்கி அதற்கு நான்கு மாற்று சக்கரங்களையும் பொருத்தினார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அணிவது போன்ற ஒரு தொப்பியையும், ஒரு Bow tie யையும் வாங்கி அணிந்துகொண்டு கெம்பீரமாக ஒக்லஹாமா என்ற அந்த சிறிய பட்டணத்தைச் சுற்றி தினமும் தனது காடிலாக் காரில் வலம் வருவார். தன்னை எல்லாரும் மதிக்க வேண்டுமென அவர் விரும்பினார்.
ஒக்லஹாமா பட்டணத்திலுள்ள அனைவரும் அவரை மிகவும் விரும்பினர். ஏனென்றால் அம்முதியவர் காரில் வரும்போது யார் மீதும் மோதி விபத்திற்குள்ளான தில்லை. எந்த சொத்துக்கும் சேதம் வந்ததுமில்லை. காரணமென்னவென்றால் அந்த அழகான காரை இரண்டு குதிரைகள்தான் இழுத்துச் செல்லும். கார் மெக்கானிக்குகள் அந்த காரில் எந்த பிரச்சனையும் இல்லை என்று எடுத்துக் கூறினார்கள். ஆனால் அந்த முதியவரோ எப்படி சாவியை உபயோகித்து காரை ஓட்டுவது என்று கற்றுக் கொள்ளவேயில்லை. காரை சாவி கொண்டு இயக்கும்போது நூறு குதிரைத் திறனுக்கும் அதிகமான திறன் கொண்டு காரை இயக்க முடியும். ஆனால் அந்த முதியவரோ இரண்டு குதிரைகளையே காரை ஓட்டப் பயன்படுத்தினார்.
இதுபோலவே நாமும் தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை தாலந்துகளை முழுமையாக வெளியே கொண்டு வராமல் அவைகளை புதைத்து வருகிறோம். மனோதத்துவ நிபுணர்கள் ஒரு மனிதன் தனக்குள்ளிருக்கும் திறமைகளில் 2-5ரூ மட்டுமே உபயோகப்படுத்துவதாகக் கூறுகிறார்கள். மேஜர் ரூபன் சில்வர்லிங் என்ற அறிஞர் ஒரு டைமும் (Dime-ஐந்து ரூபாய்க்கு சமம்). 20 டாலர் தங்க பாளமும் கடலுக்கடியில் யாரும் பயன்படுத்த முடியாதபடி கிடந்தால் இரண்டும் சமமே என்று கூறுகிறார். நமதாண்டவர் இயேசுகிறிஸ்து கூறிய உவமையில் ஒரு தாலந்தை வாங்கினவன் தன்னுடைய தாலந்தை புதைத்து வைப்பதுபோல உங்கள் தாலந்துகளை திறமைகளை மறைத்து வைக்காமல் தேவராஜ்ஜிய விரிவாக்கப் பணிக்காக அவற்றை உபயோகியுங்கள்!
“உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்” (மத்தேயு 25:29)



