நிகழ்கால நிஜங்களை நினைவுகளின் போர்வையால் சுருட்டி இறந்தகால அறைக்குள் அடக்கி வைக்கிறான் மனிதன். அவ்வப்போது அந்த அறைக்குள் சென்று தான் விரும்பும் நினைவுகளை அசைபோட்டு மீண்டும் அங்கேயே விட்டுவிட்டு நிஜத்திற்குள் வந்துவிடுகிறான். சிலர் தான் விரும்பா நினைவுகளுக்கு, நினைவு வந்து விடக் கூடாதென்பதற்காக போதையால் அதை கோமாவிலேயே வைக்க ஆசைப் படுகிறார்கள். மொத்தத்தில் நினைவுகளை அழிக்கமுடியாதென்பது தெரிகிறது.
ஆம்! உலகம் முழுவதும் ஒரு நொடிப்பொழுதில் அழித்தொழிக்க அணு குண்டுகளை கண்டுபிடித்த மனிதனால் மனித நினைவுகளை அழித்தொழிக்க வகை காண இயலவில்லை. நினைவுகள் மனித ஆத்துமாவின் ஒரு அங்கமாக இருப்பதாலும், மனித ஆத்துமா தேவனின் படைப்பாக இருப்பதால், மனிதனால் ஏனோ அந்த எல்லைக்குள் எட்டிப்பார்க்க இயலவில்லை.லூக்கா 16ஆம் அதிகாரத்தில் லாசரு மற்றும் பணக்காரனைப் பற்றி எழுதப் பட்டுள்ளது. பூமியிலிருந்து மரித்து தரித்திரனாகிய லாசரு ஆபிரகாமின் மடியிலும் பணக்காரன் மரித்து பாதாளத்திலும் இருக்கிறார்கள். பாதாளத்தில் கொடிய வேதனைப்படும் பணக்காரன், பூமியில் உயிரோடு இருக்கும் தன்னுடைய ஐந்து சகோதரர்கள் இங்கேவந்து பாதாளத்தில் வேதனைப்பட்டுவிடக் கூடாதென்று லாசருவை பூமிக்கு தன் சகோதரர்களிடம் அனுப்பி சாட்சி சொல்லும்படி ஆபிரகாமிடம் வேண்டிக்கொள்கிறான்.எனதருமை தம்பி தங்கையே! மகிழ்ச்சியும் வேதனையும் நினைவுகளும் ஏதோ பூமியோடு முடிந்துவிடக்கூடிய விஷயம் இல்லை என்பதை மேற்சொன்ன சம்பவம் எடுத்துச்சொல்கிறதல்லவா!
பாதாளத்திலிருந்து பூமியின் நினைவுகளை அசைபோட முடிகிறதென்றால், பாதாளத்தில் வேதனையை அனுபவிக்க முடிகிறதென்றால் ஒரு ரகசியம் புரிகிறது. தன் சகோதரர்களைப் பற்றி யோசிக்கும் அதே ஆத்துமாதான் பாதாளத்தில் கொடிய வேதனையும் பட்டுக்கொண்டிருக்கிறது. ஆம்! பூமியிலிருந்த பணக்காரரின் அதே ஆத்துமா தான் கஷ்டங்களை அனுபவிக்கிறது.எனவே, கடைசி காலத்தின் கடைசி நிமிடங்களில் நிற்கும் நீங்களும் உங்கள் ஆத்துமாக்களின் நித்திய வாழ்க்கையைப் பற்றி யோசிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. இன்றைக்கு யோசித்து மனம் திரும்பாவிட்டால் இந்தக் கட்டுரையை பாதா ளத்திலிருந்து நினைவுகூற வேண்டியதாக இருக்குமோ? யாரறிவாரோ?
“மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது…” (மத்.4:17)