சங்கீதக்காரனாகிய தாவீது சங்.84:10ல் “ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது” என்று பாடுகிறார்.
கர்த்தருடைய நாளைக் கனப்படுத்திய ஒரு மாமனிதனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை ஹிந்து நாளிதழ் (The Hindu) தனது 25-11-2000 பதிப்பில் வெளியிட்டிருந்தது. அந்த மனிதன் அர்ஜென்டினா நாட்டின் அதிகாரப்பூர்வமான கால்பந்து கோல்கீப்பர் கார்லோஸ் ஏஞ்சல் ரோ (Carlos Angel Roa). ரோ 1998ஆம் ஆண்டு பிரான்ஸில் (France) நடந்த உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் சிறந்த முறையில் கோல்களை தடுத்து விளையாடி தனது நாட்டிற்கு பல போட்டிகளில் வெற்றியைத் தேடி தந்தார். அதனால் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் அவருக்கு 10 மில்லியன் டாலரை (47.5 கோடி) வருட சம்பளமாக தர முன்வந்தது. ஆனால் சில கால்பந்தாட்டப் போட்டிகள் ஓய்வு நாளில் நடைபெறும். கார்லோஸ் ரோ கர்த்தருடைய ஓய்வுநாள் கால்பந்தாட்டத்தை விட முக்கியமானது என்று கூறி, தனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பைப் புறக் கணித்தார். அவருடைய பயிற்சியாளர் ஜோஸ் பெக்கர்மேனால் (Jose Bekerman) ரோவை அவருடைய தீர்மானத்திலிருந்து மாற்ற முடியவில்லை.
முப்பது வயதான கார்லோஸ் ரோவுக்கு இங்கிலாந்து மான்செஸ்டர் யுனைடெட் ஒரு தொடர் போட்டிக்கு ஒரு மில்லியன் டாலர் தர முன்வந்தது. ஆனால் கர்த்தருடைய ஓய்வுநாளை கனப்படுத்த விரும்பிய ரோ அந்த அழைப்பையும் நிராகரித்தார். இன்று கார்லோஸ் ரோ அர்ஜென்டினாவில் உள்ள கிராமத்தில் இருந்துகொண்டு கர்த்தருடைய ஊழியத்தைச் செய்து வருகிறார். கர்த்தருடைய ஓய்வுநாளை கனப் படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்தால் தனக்குக் கிடைத்த புகழை, கனத்தை, பல கோடி டாலர்களை இழக்கக் கொடுத்தார் ரோ.கிறிஸ்துவுக்காக இழப்பவர் எவரும் தரித்திரராவதில்லை என்பது எத்தனை பெரிய உண்மை.
“என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்ட மானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,
அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.” (ஏசாயா 58:13,14)



