என்னுடைய தகப்பனாருடைய சகோதரியின் மகன், இங்கிலாந்து தேசத்திலே 20 ஆண்டுகளுக்கு மேலாக தலைமை பொறியாளராகப் பணியாற்றி இந்தியா வந்திருந்த சமயம்… அவர்கள் ஒரு சிறந்த மின்னனுவியல் பொறியாளர், போகாத நாடுகளே இல்லை, பார்க்காத தொழில் நுட்பங்களே கிடையாது என்றுகூடச் சொல்லலாம். பல தொழிற்சாலைகளை நிர்மானித்த அனுபவமும் அவர்களுக்கு உண்டு.
நான் ஒருமுறை அவர்களிடம் நமது மிஷனரி இயக்கத்தைப் பற்றி ஒரு VCD கொடுத்தேன். அவர்களும் அதைப் பார்ப்பதாகக் கூறினார்கள்.
சில நாட்கள் கழித்து, அவர்களிடம் அந்த VCD எவ்வாறு இருந்தது என்றுக் கேட்டேன். அவர்கள் அதற்கு பிரசங்கத்தைக் கேட்டேன். நன்றாக இருந்தது என்று சொன்னார்கள். நான் உடனே, மற்றக் காரியங்களைப் பார்க்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என்னுடைய VCD பிளேயரில் படங்கள் வரவில்லை, சத்தம் மட்டும் வருகின்றது என்று சொன்னார்கள்.
நான் அவர்களுடைய VCD பிளேயரையும் TV யையும் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். அவைகள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பழமையானவை. பழைய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை. அவர்கள் இந்த பழைய உபகரணங்களையே பயன்படுத்தி மன ரம்மியமாக வாழ்ந்து வருகிறார்கள். அயல்நாட்டு வாழ்க்கை, உயர்கல்வி, பெரிய மனிதர்களின் பழக்கவழக்கங்கள், அவர்களுடைய தனிப்பட்ட “எளிய வாழ்க்கையை” பாதிக்கவில்லை.
இவர்கள் அநேக வருடங்கள் அயல்நாடுகளில் வேலை பார்த்ததன் விளைவாக, அநேக இடங்களில் திருச்சபைகள் கட்டப்பட்டு உள்ளன. எளிய வாழ்க்கையே பெரிய காரியங்களை சந்திக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.இன்றைக்கு நம்மில் அநேகருக்கு கர்த்தருக்காக எதையும் கொடுக்க முடியவில்லை. கையில் மீதமும் ஒன்றுமில்லை. ஏனென்றால் நாம் நமது தேவைகளை சுருக்கத் தெரியாமலோ அல்லது விருப்பமில்லாதோ இருக்கிறோம்.என்னுடைய தகப்பனார் அடிக்கடி கூறுவார்கள்…. “கொடுக்கும்போது கைகளில் வலி உண்டாக வேண்டும்”.
கொடுத்து, கொடுத்து சிவந்தக் கரங்கள் நமது கரங்களாகத்தான் இருக்க வேண்டும். நாம் ஒருநாளும், நமது ஆண்டவரை மிஞ்சி கொடுத்துவிட முடியாது. மேலும் நாம் ஆண்டவருக்காக செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும், நமது ஆண்டவர் இம்மையிலும் மறுமையிலும் பன்மடங்காகத் திருப்பித் தருவார்.
மாரநாதா! இயேசு சீக்கிரம் வருகிறார். அவனவனுக்கு அவர் அளிக்கும் பலன் அவருடன் கூட வருகிறது.