முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் மிகவும் பலசாலியான ஒரு மரவெட்டி வாழ்ந்து வந்தான். அவன் ஒரு மரவேலை செய்யும் ஆசாரியிடம் தனக்கு வேலை தருமாறு கேட்டான். அந்த ஆசாரி அவனுக்கு வேலை தருவதாகக் கூறி, ஒரு நல்ல தொகையை சம்பளமாக வழங்குவதாகவும் கூறினார். மரவெட்டி நல்ல சம்பளம் கிடைக்கிறதே, எனவே கடினமாக உழைக்க வேண்டும் என தீர்மானம் செய்து கொண்டான். அவனுடைய எஜமானாகிய மர ஆசாரி ஒரு கோடாரியை அவனிடம் கொடுத்து, அவன் வேலை செய்ய வேண்டிய காட்டுப் பகுதிகளை மரவெட்டிக்குக் காண்பித்தான்.
முதல்நாள் மரவெட்டி 18 மரங்களை வெட்டி வந்தான். அவனுடைய எஜமான் அவனை மிகவும் பாராட்டினான். எஜமானுடைய பாராட்டில் நெகிழ்ந்துபோன மரவெட்டி மறுநாள் இதைவிட கடினமாக உழைக்க வேண்டும் என தீர்மானித்தான். அடுத்தநாள் எவ்வளவோ பிரயாசப்பட்டும் அவனால் 15 மரங்களை மட்டுமே வெட்ட முடிந்தது. மூன்றாவது நாள் மிகவும் பிரயாசப்பட்டு 10 மரங்களை மட்டுமே வெட்டிக் கொண்டு வந்தான். “என் பெலனை நான் வரவர இழந்து வருகிறேன்” என்று தனக்குள் எண்ணிக்கொண்டான் மரவெட்டி. அவன் மர ஆசாரியிடம் சென்று, “என்னால் முன்புபோல் மரங்களை வெட்ட முடியவில்லை” என்றான். மர ஆசாரியாகிய அவன் எஜமான் “எப்போது கடைசியாக கோடாரியை கூர் தீட்டினாய்” என்றார். மரவெட்டி “எனக்கு கூர்தீட்டவே நேரமில்லை, மரம் வெட்டுவதிலேயே என் நேரம் முழுவதும் செலவழிந்து விட்டது” என்றான்.
இதுபோலவே நாமும் அநேகமுறை கூர் மழுங்கிப் போனவைகளை கூர் தீட்டாமல் இருக்கிறோம். உலகக் காரியங்களுக்காக, நம்முடைய நேரத்தை, பெலத் தை செலவிட்டு விட்டு ஜெபிக்க நேரமில்லை, வேதம் வாசிக்க நேரமில்லை என்கி றோம். இயந்திரக் கதியில் ஓடிக்கொண்டிருக்கும் நாம் நேரத்தை ஒதுக்கி பரமனின் பாதத்தில் காத்திருந்து கூர் மழுங்கிப் போன நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தை சரி செய்வோமா!
அப்பொழுது தான் கிறிஸ்துவுக்காக பல ஆத்துமாக்களை (பல மரங்களை) ஆதாயம் செய்ய முடியும்.
“கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசாயா 40:31)



